உக்ரைனின் கீவ் நகரில் நீண்ட ஊரடங்கு அமல் – மேயர் உத்தரவு! ரஷ்யா போர் எதிரொலி!
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷ்யப் படைகள் மிகப்பெரிய அளவிலான ஷெல் தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருப்பதால், அந்நகரில் புதிய மற்றும் நீண்ட ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக மேயர் அறிவித்திருக்கிறார்.
ஊரடங்கு அமல்
கடந்த 27 நாட்களாக நடைபெற்று வரும் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போரில் இதுவரை பல உக்ரேனிய நகரங்கள் தாக்கப்பட்டு கடுமையான சேதத்திற்கு ஆளாகி இருக்கிறது. அதே போல ஆயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் மரணமடைந்து வரும் நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் பிடி தளர்த்தப்படுவது போல தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது உக்ரேனியப் படைகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ரஷ்ய இராணுவம் மரியுபோலில் குண்டுவீச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் மற்ற நகரங்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.
மார்ச் 25 முதல் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் அதிரடி முடிவு என்ன?
இப்போது மனிதாபிமான அடிப்படையில் மக்களை பாதுகாப்பதற்காக மரியுபோல் துறைமுக நகரத்தில் ராணுவ ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை உக்ரைன் நிராகரித்து போரில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள போடில் மாவட்டத்தில், ரஷ்ய ராணுவத்தின் ஷெல் தாக்குதலில் ஒரு ஷாப்பிங் சென்டர் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதே போல சுமி நகரின் புறநகரில் உள்ள ஒரு இரசாயன ஆலையிலும் வெடிகுண்டு வீசப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரஷ்யா உக்ரைன் போருக்கு மத்தியில், உக்ரைன் தலைநகரில் புதிய மற்றும் நீண்ட ஊரடங்கு உத்தரவை விதிப்பதாக கீவின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார். ஏனெனில் ரஷ்யப் படைகள் நகரத்தின் மீது அதிக ஷெல் தாக்குதல்களை நடத்தும் என்று அதிகாரிகள் எதிர்பார்த்து வருவதால் மேயர் விட்டலி கிளிட்ச்கோ, இரவு 8 மணி (1800 GMT) முதல் புதன்கிழமை காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. தவிர நகரின் சில பகுதிகளில், ரஷ்ய இராணுவத்தின் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில் ரஷ்ய ராணுவம் கலைப் பள்ளி மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அங்குள்ள மக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ரஷ்ய இராணுவத்தின் குண்டுவெடிப்பால் மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதாகவும், வெளி உலகத்துடனான நகரத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மரியுபோல் அதிகாரிகளும், உதவிக் குழுக்களும் தெரிவித்துள்ளனர்.