TNPDS ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கு அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கிறது. இந்த ரேஷன் அட்டையை பெறுவது எப்படி என்று கூட மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. எந்த அலுவலகத்திற்கு சென்று யாரை பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் மத்தியில் குழப்பங்கள் வருகிறது. இந்த குழப்பத்தை போக்க தான், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தி உள்ளது.
முழு விவரம் இதோ:
குடும்ப அட்டையானது இந்தியக் குடிமகனுக்கு மிக முக்கிய ஆவணமாகும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995 அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி வழங்கல் விநியோகம் போன்றவற்றை நியாயமான முறையில் வழங்கிட மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதன்படி அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு பல மாநில அரசுகள் பல சலுகைகளை வழங்கி உள்ளன. இதற்கிடையில், கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தமிழகத்தின் ஏழை ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிதி மற்றும் பிற சலுகைகளை வழங்கவும் தமிழக அரசு வழங்கியது.
தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு ரேஷன் கார்டுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ரேஷன் கடைகளில் நடைபெறும் மோசடிகளை தடை செய்ய , ரேஷன் கார்டு வைத்திருப்பவரின் வசிப்பிடத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற, காகிதத்தின் மேல்நிலை செலவை நீக்கவும், ரேஷன் கார்டுகள் அச்சிடுதல் மற்றும் விநியோக செலவுகளை நிறுத்த போன்ற காரணங்களுக்காக ரேஷன் கார்டு டிஜிட்டல் மயமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையை பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.மேலும் ஆதார் அட்டை, பான் கார்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம், வங்கி பாஸ்புக், சாதி / வகை சான்றிதழ், வருமான சான்றிதழ், மின் கட்டணம் ஆகிய ஆவணங்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தேவைப்படும் முக்கிய ஆவணங்கள் ஆகும்.
1. ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க, முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2.முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்
3.இப்போது திரையில் ஒரு படிவம் தோன்றும். அந்த படிவத்தை பயனாளிகள் நிரப்ப வேண்டும்.
4.அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர், அதனுடன் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
5.இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருத்தல் வேண்டும்
6.பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும்
7.பின்னர் நீங்கள் ‘உறுதிபடுத்து’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.கிளிக் செய்த பிறகு உங்களுக்கு ஒரு reference எண் கிடைக்கும், அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்
இதனை தொடர்ந்து, நீங்கள் சமர்பித்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை துறை சார்ந்த அலுவலர்கள் சரிபார்ப்பார்கள். சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். ரேஷன் கார்டு படிவம் சரிபார்ப்பு பூர்த்தியாகவில்லை என்றால், தேவையான ஆவணங்களை கேட்டறிந்து சமர்பிக்க வேண்டும்.