தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
கனமழை
தமிழகத்தில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்ததாக வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது. மேலும், ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது.
மேலும், தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் மதுரை மாவட்டத்தில் நான்கு டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை மையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதேபோல இன்றும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
மேலும், மே 13ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று அந்தமான் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.