சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.90,000 ஆக உயர்வு – அரசு ஒப்புதல்!
சட்டப்பேரவை உறுப்பினர்களின் மாத ஊதியத்தை ரூ.54,000 லிருந்து ரூ.90,000 ஆக உயர்த்துவதற்கான பரிந்துரைக்கு டெல்லி சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு:
தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவையின் இரண்டு நாள் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை ரூ.54,000 லிருந்து ரூ.90,000 ஆக உயர்த்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த கூட்டத்தின் முதல் நாளில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசாங்கம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமைக் கொறடா, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் மற்றும் தலைவர் ஆகியோரின் சம்பளம் மற்றும் படிகளை அதிகரிக்க ஐந்து வெவ்வேறு மசோதாக்களை தாக்கல் செய்தது.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்துவதற்கான மசோதா நேற்று (ஜூலை 4) நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஐந்து திருத்த மசோதாக்களை டெல்லி சட்டம், நீதி மற்றும் சட்டமன்ற விவகார அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் அறிமுகப்படுத்தினார். இது குறித்த மசோதாவில் விலைவாசி உயர்வுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களின் பணிக்கும் ஏற்றவாறு சம்பளம் வழங்க வேண்டும் என சட்டசபையில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதோர்க்கு ரூ.500 அபராதம் – திடீர் கட்டுப்பாடு விதிப்பு!
தொடர்ந்து சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, ‘கடந்த 7 ஆண்டுகளில் இது குறித்து நிறைய விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு சில எதிர்ப்புகளை தெரிவித்தது. அவர்களின் பரிந்துரைகளை இணைத்த பிறகு, டெல்லி சட்டசபை மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு அதை நிறைவேற்றும் என்று நம்புகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், டெல்லி அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ள இந்த மசோதா இந்தியக் குடியரசுத் தலைவரால் நிறைவேற்றப்பட்ட பிறகு, டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதுள்ள ரூ.54,000 லிருந்து ஊதியம் ரூ.90,000 ஆக வழங்கப்படும்.