தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுமுறை – அரசு உத்தரவு!
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக ஓய்வில்லாமல் பணியாற்றி வரும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுமுறை அளித்து, அந்நாளில் சிறப்பு பயிற்சிகளை நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டுமாக உருவெடுத்த கொரோனா 2 ஆம் அலையால் தமிழகத்தில் மே மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 நிதியுதவி மற்றும் இலவச மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
அதன் படி 2 தவணைகளாக கொடுக்கப்பட்ட நிவாரண பொருட்கள், வழக்கமான ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை தொடர்ந்து விநியோகம் செய்து வந்ததால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வழக்கமான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று நாளில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 2 மாதங்களாக பணி செய்து வரும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வரும் 14 ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் அந்நாட்களில் ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டத்தின் அவசியம் மற்றும் அதனை சிறப்பாக செயல்படுத்தும் முறை குறித்தும் கடை ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.