SSC 3261 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு நடத்தும் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகளை எழுதும் தமிழக இளைஞர்களுக்கான சில முக்கிய வழிகாட்டுதல் நடைமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள் வெளியீடு
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளர், பெண்கள் பயிற்றுநர், மருத்துவ உதவியாளர், பொறுப்பாளர் போன்ற 3261 காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான கட்டணங்களுடன் தேர்வர்கள் விண்ணப்பங்களை செலுத்த 25.10.2021 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் பணி நியமனம் செய்யப்பட ஏதுவாக போட்டித்தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டமும் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த போட்டித்தேர்வினை எழுத விரும்பும் மாணவர்கள் இந்த இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து பயனடையும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கும் உரிய பாடக்குறிப்புகளும் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு – பெற்றோர்கள் கருத்து!
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்களின் வாயிலாக பணியாளர் போட்டி தேர்வுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் நேரடியாக அல்லது இணைய வழியாக நடத்தப்பட உள்ளன. அதனால் போட்டித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குனர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.