தமிழக பள்ளிகளுக்கு அரசு புதிய உத்தரவு – கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி!
தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
புதிய உத்தரவு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி 10 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நேற்று மாணவி ஸ்ரீ மதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அவரவர் சார்ந்த CEO வின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
CEO வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு CEO அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது.
பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விட்டால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலை பேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும். மரத்தடியில்வகுப்புகளை நடத்தக் கூடாது.
பள்ளிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு தரமாக, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆசிரியர்கள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்க கூட்டத்தில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.
பள்ளி பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வர வேண்டும்.
ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்த கூடாது. தங்களின் சொந்த வேலைக்காக மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே அனுப்ப கூடாது.
ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-ல் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
பள்ளிகள் – பொதுமக்கள் இடையேயான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பேற்று, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.