திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – தங்க மோதிரம் பரிசு!
தமிழகத்தில் தொழில்துறை நிறுவனங்கள் அதிகம் இயங்கி வரும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் வருடத்தின் அனைத்து நாட்களும் வேலை செய்தால் தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்படும் என ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மோதிரம் இலவசம்
புதிதாக துவங்கும் ஒவ்வொரு வகையான கடைகளும் பல சலுகைகளை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவது வழக்கமான செயலாகும். ஆனால் ஒரு தொழில்துறை நிறுவனத்தில் விடுமுறையின்றி வருடம் தோறும் வேலை செய்தால் அவர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும் என ஒரு அறிவிப்பு வெளியாகி தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதாவது தமிழகத்தின் முக்கிய தொழில்துறை இடமாக திகழும் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது எப்போது? இன்று மாலை ஆலோசனை!
இந்த நிறுவனங்கள் அனைத்தும் முழு ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்தது. தற்போது இந்நிறுவனங்களில் 100% ஊழியர்கள் தொடர்ந்து செயல்படலாம் என அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை காரணமாக இதுவரை 80% பணியாளர்கள் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வேலை ஆட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால், ஒரு பனியன் நிறுவனத்தின் உரிமையாளர், தனது நிறுவனத்துக்கு ஓவர்லாக் டைலர் தேவை என்றும், வருடத்தின் அனைத்து நாட்களும் பணியாற்றுபவர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக அளிக்கப்படும் என ஒரு விளம்பர பலகை வைத்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்த்து இருந்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த விளம்பர பலகையை அகற்றியுள்ள உரிமையாளர், ‘பனியன் நிறுவனத்தில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், புதிய ஊழியர்களை தேடி வருகிறோம். அதன் படி தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச தங்க மோதிரம் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். ஆனால் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து அந்த விளம்பரம் நீக்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார். திருப்பூரில் ஒரு மாதத்துக்கு முன்னதாக, ஒரு வாரம் தொடர்ந்து வேலைக்கு வந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.