ஏப்ரல் 7 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தின் கரௌலி நகரில் ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய அரசாங்கம், தற்போது இக்கட்டுப்பாடுகளை ஏப்ரல் 7 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
கடந்த வாரத்தில் ராஜஸ்தான் மாநிலம் கரௌலி நகரில் நடைபெற்ற இந்து மத விழாவில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாற அந்நகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையாக ஏப்ரல் 2ம் தேதியன்று முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இப்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட கரௌலி பகுதியில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவை நாளை (ஏப்ரல்.7) வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
TNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி வழங்கவில்லை – பெண் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
இதற்கு முன்னதாக, கரௌலி நகரில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக இந்து புத்தாண்டு அன்று பைக் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலை தொடர்ந்து அந்நகரின் பல இடங்களில் தீவைப்பு மற்றும் நாசவேலை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தில் பல வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், இந்த வன்முறையில் 35 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கலவரத்தை கருத்தில் கொண்டு அரசு மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த ஊரடங்கு காலங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக இரண்டு மணி நேரம் தளர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ள மாவட்ட நிர்வாகம், முறையான அனுமதி அட்டையை காட்டிய பிறகே தேர்வு மையத்துக்கு செல்ல அனுமதித்தது. கரௌலியில் கையடக்க இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.