தமிழகத்தில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் – வரலாற்றில் முதன்முறை!
தமிழகத்தில் திமுகவின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் பட்ஜெட்:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் நேற்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்தார்.
அதில் அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள், மகளிர் நலத்திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வேளாண்மை துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 16 வது சட்டசபை முதல் அமர்வில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள பட்ஜெட் கூட்ட தொடரில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கான முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.