பராமரிப்பு வேலையின் காரணமாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில் சேவை:
சென்னையின் சில பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் இன்ஜினியரிங் பணி நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆவடி பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே சென்னை சென்ட்ரல், கடற்கரை செல்லும் மின்சார ரயில் சேவையில் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (பிப்.15, 16, 17) மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில் சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படும்.பட்டாபிராமில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (மூா் மாா்க்கெட் வளாகம்) அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படும். அதற்கு பதிலாக பட்டாபிராமில் இருந்து சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.
ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மற்றும் அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படும். பயணிகள் வசதிக்காக இந்த தேதிகளில் அதிகாலை 4 மற்றும் அதிகாலை 4.05 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மேலும், பட்டாபிராமில் இருந்து சென்னை கடற்கரைக்கு இரவு 10.25 மணிக்கு செல்லும் மின்சார ரயில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆவடியுடன் நிறுத்தப்படும் என ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.