விதிமுறைகளை பின்பற்றா விட்டால் மீண்டும் ஊரடங்கு – மத்திய அரசு அறிவுறுத்தல்!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வந்தாலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா நடவடிக்கை:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் முதல் கொரோனாவால் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் துரித நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 40 ஆயிரமாக குறைந்து உள்ளது.
கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் ஆகஸ்ட் முதல் திறப்பு? ராஜஸ்தான் முதல்வர் ஆலோசனை!
இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்துகளில் பயணம் செய்யும் போது கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் மீறுவது காணப்படுகிறது.
எனவே மாநில அரசுகள் வழங்கிய தளர்வுகளை கவனிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா இரண்டாம் அலை இன்னும் முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மாநில அரசுகள் ஐந்து வழிமுறைகளை தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். அவை பரிசோதனை, பாதிப்பிற்கு ஆளானவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், உரிய கோவிட் வழிகாட்டுதல்களை பின்பற்றுதல் ஆகியவை ஆகும்.
TN Job “FB Group” Join Now
சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாதது தான் பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே மக்கள் அதிகம் கூடும் மார்கெட்டுகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றை திறப்பதற்கு முன்பாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மக்கள் கூட்டம் அதிகரிப்பு காரணமாகவே R Factor அளவானது சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் மதிப்பு 1.0க்கு அதிகமாக இருந்தால் அங்கு கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விதிமுறைகளை முறையாக பின்பற்றா விட்டால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.