வெளிநாட்டு கொரோனா நிவாரணத்துக்கு ஐஜிஎஸ்டி விலக்கு – மத்திய அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்காலிகமாக அடிப்படை வரி மற்றும் சுகாதார வரி ஆகியவற்றிலிருந்து விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
வரி விலக்கு:
வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக கொரோனா தடுப்பு நிவாரணப் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள சங்ககள், அறக்கட்டளை அமைப்புகள் போன்றவற்றிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, நன்கொடையாக இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு மே 3, 2021ம் தேதி முதல் ஐஜிஎஸ்டி வரியிலிருந்து தற்காலிகமாக விலக்கு அளிப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மறு ஒட்டு எண்ணிக்கை தேவையில்லை – தலைமை தேர்தல் அதிகாரி!!
மத்திய அரசு இது தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சுங்கத்துறை ஏப்ரல் 30ம் தேதி வெளியிட்ட திருத்தப்பட்ட அறிவிப்பு படி, ரெம்டெசிவிர் / ஏபிஐ மற்றும் பீட்டா சைக்ளோடெக்ட்ரின், பரிசோதனைக் கருவிகளுக்கு 2021 அக்டோபர் 31ம் தேதி வரையும், 24ம் தேதி வெளியிடப்பட்ட சுங்க அறிவிப்பின்படி மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், கிரையோஜெனிக் டேங்கர்ஸ் போன்ற ஆக்சிஜன் சிகிச்சை தொடர்பான சாதனங்கள் மற்றும் கொரோனா 19 தடுப்பூசிகளுக்கு 2021 ஜூலை 31ம் தேதி வரையிலும் சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விலக்கு கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது.அவை,
- வரி விலக்குக்கு மாநில அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி, நிவாரணம் அளிக்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை இலவசமாக வழங்க அனுமதி அளிக்கலாம்.
- இந்த பொருட்களை மாநில அரசோ அல்லது எந்த ஒரு நிறுவனமோ / நிவாரண அமைப்போ இந்தியாவில் எங்கும் இலவசமாக இறக்குமதி செய்ய முடியும்.
- இந்த பொருட்களை இறக்குமதி செய்பவர், சுங்கத்துறை ஒப்புதல் பெறுவதற்கு முன், மேலே கூறப்பட்ட சிறப்பு அதிகாரியிடம், இலவசமாக பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்கள் என சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
- இறக்குமதி செய்யப்பட்ட பிறகு, இறக்குமதி செய்பவர், விமான நிலையம் / துறைமுகத்தில் உள்ள சுங்க உதவி ஆணையரிடம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் விவரத்தை இறக்குமதி செய்யப்பட்ட தேதியிலிருந்து 6 மாதத்துக்குள் அல்லது நீட்டிக்கப்பட்ட 9 மாத காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- அந்த விவர அறிக்கைக்கு மாநில அரசு நியமிக்கும் சிறப்பு அதிகாரி சான்றிதழ் அளிக்க வேண்டும்.
- இந்த விலக்கு மூலம் இலவசமாக இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு 2021 ஜூன் 30ம் தேதி வரை ஐஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை.