TNPSC குரூப் 4 தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – எதிர்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்கள்!
குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி (TNPSC) வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து தேர்வர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை தாங்களாகவே மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தக்கட்ட நிலைக்கு தயாராகுவது நல்லது என TNPSC தெரிவித்துள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட குரூப்-4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் கடந்த ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. மேலும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். வரும் ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘Answer Key Challenge’ என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download
அதன்பின், இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும். ஒருவர் எத்தனை கேள்விகளையும் மறுக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இருப்பினும், தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வசதியை கோர முடியும். இந்த குரூப் 4 ஒற்றை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தெரிவு முறை நடைபெறுகிறது. அதாவது, முதன்மை தேர்வு, வாய்வழித் தேர்வு என எதுவுமின்றி தற்போது நடைபெற்ற எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடைப்படையிலும், வகுப்பு வாரி இட ஒதுக்கீடு அடிப்படையிலும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதனடிப்படையில், விண்ணப்பதாரர்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
- ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், இசுலாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் என வகுப்புப் பிரிவுகளுக்கு 69% இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது.
- மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் 2016 சட்டப்பிரிவின் படி, நேரடி நியமனங்களில் பெண்களுக்கென 30% (Horizontal Reservation) விழுக்காடு ஒதுக்கப்படுகிறது.
- இதில், தகுதி வாய்ந்த ஆதரவற்ற விதவை பெண்களுக்காக 10% ஒதுக்கப்படுகிறது. மேலும், பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கை விண்ணப்பதாரர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கருதப்படுவர்.
- ஆண் -அல்லது – பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கை விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவுக்கான 70% இடஒதுக்கீடு பிரிவின் கீழ் கருதப்படுவர். அதேபோன்று, மாற்றுத்திறனாளிகளுக்கான வகைப்படுத்தப்பட்ட 4% இடத்துக்கீடு குரூப் 4 பதவிகளுக்கு பொருந்தும்.
குரூப் 4 2022 தேர்வு கட் ஆப் கணிப்பு
- OC – 175 +
- BC – 168 +
- MBC- 165 +
- SC/ST- 157+
இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கட் ஆப் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிஎன்பிஎஸ்சி வாரியத்தின் அதிகாரபூர்வ கட் ஆப் முடிவுகள் மட்டுமே இறுதியானது. இதில் மாறுதல்கள் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.