தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி இத்தனை கார்டுகள் செல்லாது!
தமிழகத்தில் ஏராளமான போலி ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாக புகார் எழுந்தது. அதை தடுக்கும் வீதம் இதுவரை சுமார் 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டு உள்ளதாக, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்து உள்ளார். இனி அந்த ரேஷன் அட்டைகள் செல்லாது, அதை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
2 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அத்தியாவசிய உணவு பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னிலை வகித்த அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் 11 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 33,888 பேருக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
அதே போல் மாவட்டத்தில் 500 ரேஷன் அட்டைகளுக்கு மேல் உள்ள 131 கடைகளை வரும் ஜூலை மாதத்திற்குள் பகுதி நேர கடைகளாகவும், முழு நேர கடைகளாகவும் பிரிக்க, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் 6,976 ரேஷன் கடைகள் விரைவில் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அதில் கடலூர் மாவட்டத்தில் 240 கடைகள் உள்ளன. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் பண்ணும் கையூட்டுகளை தடுக்க, கொள்முதல் நிலையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் விவசாயிகள் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தொடர்ந்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இதையடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது உத்தரவின் பேரில், இனி குடோனில் இருந்து தரமான பொருட்களை தான் ரேஷன் கடைக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விரைவில் அனைத்து நியாய விலை கடைகளிலும் அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது என்றும் 12 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.