தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக முன்னறிவிப்புடன் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் ஜூன் 2ம் தேதியான நாளை மறுநாள் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் மின்சாரத்துறையில் வைக்கப்படும் புகார்கள் அனைத்தும் உடனடியாக சீரமைக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய மின் இணைப்புகளுக்காக மின்வாரியத்தில் வைக்கும் கோரிக்கைகள் உடனடியாக காலதாமதம் இன்றி வழங்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் தொடங்க கேட்கப்படும் மின் இணைப்புகளுக்கான கோரிக்கை அடுத்த நாளே செயல்படுத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும், மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்கு முன்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதை மின்வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download
அவ்வாறு, ஏதேனும் மின் விபத்துகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே பொறுப்பு சார்ந்தவர்கள் ஆவார்கள் என்றும் மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின்சாரத்துறையின் தடையற்ற சேவையை அளிப்பதற்காக தமிழகம் முழுவதும் மாதம் ஒரு முறை பகுதி வாரியாக மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 2ம் தேதியான நாளை மறுநாள் வியாழக்கிழமை நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூன் 2ம் தேதி நாகர்கோவில் மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் கணேசபுரம் பீடரில் உயர் அழுத்த மின் பாதையில் இந்து கல்லூரி சாலை, போக்குவரத்து பணிமனை எதிரே மின்மாற்றி, மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கும் நிலையில், எம்.ஜி.ஆர். நகர், வி.ஐ.பி.ஜிம் தெரு, சரலூர், போக்குவரத்து பணிமனை பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.