12 ஆம் வகுப்பு மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பிற்கான மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மறு மதிப்பீடு:
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியான நிலையில் கிட்டத்தட்ட 47, 934 மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்நிலையில், 12 ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் 9ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடத்தப்படும் எனவும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் புதிய பெயரை சேர்க்க வேண்டுமா? அப்போ இந்த ஆவணம் கட்டாயம் தேவை!
மேலும், மாணவர்களின் விடைத்தாள்களின் நகல்களை கோரி விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான https://www.dge.tn.gov.in/ என்கிற இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து அந்த அதனை சரி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களும் இதே இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக தங்களுக்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும், மறு கூட்டலுக்கான கட்டணமாக உயிரியல் பாடத்திற்கு ரூபாய் 350 மற்றும் இதர பாடங்களுக்கு 250 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, மறு மதிப்பீடு செய்ய இருக்கும் மாணவர்கள் பாடத்திற்கு தலா ரூபாய் 500 கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.