‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் ஓவியா? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாகி கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில், முதல் சீஸனின் போட்டியாளரான ஓவியா இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் ஓவியா
விஜய் டிவியில் கடந்த 5 சீசன்களாக ஒளிபரப்பட்ட சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த மிகப்பெரிய வரவேற்புகளை அடுத்து தற்போது புதிய முயற்சியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் என்ற ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவானது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 14 முன்னாள் போட்டியாளர்களுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு நாளின் 24 மணிநேரத்திற்கும் இதனை கண்டு களிக்கலாம் என்பது தான்.
அந்த வகையில் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோ ஒளிபரப்பாகி சுமார் 2 வாரங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரத்திலும் அபிராமி, வனிதா உட்பட ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் இந்த வார நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் இந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், ஷாரிக் மற்றும் அபிநய் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.
இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்குபெற்று மக்களின் ஏகபோக ஆதரவை பெற்றிருக்கும் நடிகை ஓவியா ‘பிக் பாஸ்’ அல்டிமேட் வைல்ட் கார்டு என்ட்ரியாக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அல்டிமேட் ஷோவில் 14 போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவிருந்த ஓவியா உடல்நல குறைபாடு காரணமாக இதில் கலந்து கொள்ளவில்லை. இப்போது உடல் நலம் தேறியுள்ள ஓவியா, வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.