தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – இனி தமிழில் தான் Initial! அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள் முன் எழுத்து என்று சொல்லப்படும் இனிஷியலை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் இனிஷியல்
தமிழகத்தில் இனி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதுபவர்கள், பெயருக்கு முன் எழுத்து அதாவது இனிஷியல் எழுதும் போது அதனை தமிழில் எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறைகளில் ‘2021 – 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் தமிழில் பெயர் எழுதும் போது, முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறைகளை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டு வர வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 25 முதல் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு விளக்கம்!
இதனை பின்பற்றும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டும் என்றும், அதில் முன்னெழுத்துக்களையும் தமிழிலேயே எழுதப்பட வேண்டுமாறு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. அதே போல மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, தமிழை முதன் முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும்.
அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும் போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டு வர, விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி கல்வி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் உள்ள அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வரவும், மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதே போல தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசுத்துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்கள், பொது மக்களின் பெயர்களை குறிப்பிடும் போதும் முன்னெழுத்துகள் உட்பட பெயர் முழுமையையும் தமிழிலேயே பதிவு செய்யப்பட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அரசுத் துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பத்தினையும் தமிழிலேயே இடுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு – 7வது ஊதியக்குழு தகவல்!
மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழில் கையொப்பமும், முன்னெழுத்தும் இருக்கும் வகையில் சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் அத்துறை சார்ந்த அலுவலகங்களிலும் தவறாது நடைமுறைப்படுத்தி ஆட்சி மொழித் திட்ட செயலாக்கத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.