தமிழகத்தில் 2000க்கு மேலாக அதிகரிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் – கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமடையும் நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொற்று பாதித்த மாவட்டங்களில் உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கில் முடக்கப்பட்டது. இதனால் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டது. மேலும் அதிக அளவு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு போட்டு வந்தது. இந்த வகையில் தொற்று பரவல் குறைந்ததன் காரணமாக மீண்டும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின.
இந்த நிலையில் டெல்டா மற்றும் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை துவங்கி உள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் உள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 31 வரை மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான முக்கிய உத்தரவு – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 2,356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,868 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. மேலும் செங்கல்பட்டில் 121, தஞ்சாவூரில் 62 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.