தமிழகத்தில் ஜனவரி 23ம் தேதியன்று முழு ஊரடங்கு அமல் – அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அனுமதி!
தமிழகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 23ம் தேதியன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கடந்த மாதம் இறுதியில் இருந்து தீவிரமடைந்து வரும் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா புதிய பாதிப்புகள் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி பொது முடக்கம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா தொற்றின் முந்தைய அலைகளை விட தற்போது நிலவும் 3ம் அலையால் நோயாளிகள் மருத்துவமனையில் சேரும் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருகிறது.
அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதமாக முழு ஊரடங்கு விதிக்கப்படாமல், கடந்த 6ம் தேதி முதற்கொண்டு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் ஜனவரி 31ம் தேதி வரை தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜனவரி 9, 16 ஆகிய இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் வார இறுதி முழு முடக்கத்தை அமல்படுத்திய அரசு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை முழுமையாக மூடியுள்ளது.
வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு தொடரும் – தனியார் அலுவலகங்கள் 50% திறனில் திறப்பு!
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் ஜனவரி 23ம் தேதியன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார். அந்த வகையில் வார இறுதி ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் மட்டுமே இம்முறையும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், உணவகங்களில் பார்சல் சேவை, அவரச தேவைகளுக்கான வெளியூர் பயணம், திருமண நிகழ்வுகள், காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் மற்றும் புறநகர் ரயில் சேவை ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.