இந்தியா முழுவதும் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விளக்கம்!
இந்தியாவில் மத்திய அரசு பாரத் பந்த் என்ற பொது முடக்கத்தை இந்தியா முழுவதும் 7 நாட்கள் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றன. இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஊரடங்குகளையும் விதித்தது. அதன்படி பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுவரை மூன்று கொரோனா அலைகள் மக்களை தாக்கியுள்ளது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டாவை போல தற்போது ஓமைக்ரான் வைரஸ் பரவி வந்தது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வர் உத்தரவு!
இதனால் மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் பொது மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு கட்டுப்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்பட்டது.
இந்த நேரத்தில் இந்தியாவில் மத்திய பாரத் பந்த் என்ற பொது முடக்கத்தை இந்தியா முழுவதும் 7 நாட்கள் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு பொதுமுடக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய போலி செய்தி பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள், அறிவிப்புகள் குறித்த போலி செய்திகளை உறுதிப்படுத்தும் பி.ஐ.பி அமைப்பு இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளது.