டெல்லி அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் – 6000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம்!!
டெல்லி பள்ளிகளில் கடந்த 4 மாதங்களில் 6,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் நியமனம்:
டெல்லியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் நோக்கிலும் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றும் முயற்சியில் எண்ணற்ற மாற்றங்களை கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டெல்லியில் முதல் மெய்நிகர் பள்ளி தொடங்கப்பட்டது.
இதன் மூலம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்கலாம். தற்போது டெல்லி அரசின் நடவடிக்கைகளால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவையும் வெகுவாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்லி அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களின் செயல் திறனை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சுமார் 6,112 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து வரும் மார்ச் மாதத்திற்குள் மேலும் 2,200 ஆசிரியர் நியமிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. கடந்த மாதங்களில் மொத்தமிருந்த 24,003 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது 17,891 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் எல்ஜி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.