தமிழகத்தில் கடந்த வாரம் முதல் ஒரு சில நாட்கள் மட்டும் குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதை தவிர மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக இருந்து வருகிறது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தை பொறுத்தவரை நேற்று கரூர் பரமத்தி, தருமபுரி மற்றும் மதுரை போன்ற உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசியது. வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 11 மற்றும் 12ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.