தமிழகத்தில் இன்று (ஜூலை 14) பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தற்போது கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 14) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
தமிழகம் முழுவதும் தற்போது பருவமழை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒரு சில நாட்களாக விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கிறது. மேலும் அடுத்து வரும் சில நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதாவது, தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக நடுமலை, வெள்ளிமலை டனல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே போல பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள சோலையாறு அணையும் நிரம்பி இருக்கிறது. இப்போது இந்த அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு வினாடி அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் சோலையாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆற்றில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 1,000 கன அடி அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இப்போது வால்பாறை பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் காரணமாக அந்த தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (ஜூலை 14) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.