TNUSRB 969 சார்பு ஆய்வாளர் தேர்வு பட்டியல் ரத்து – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
தமிழகத்தில் 969 சார்பு ஆய்வாளர்களின் நேரடி தேர்வு நியமன பட்டியலை ரத்து செய்யக்கோரி பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்வுப்பட்டியல் ரத்து?
தமிழகத்தில் சார்பு ஆய்வாளர் பணிக்கு 969 பேர் நேரடியாக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருச்சி முதலாவது பட்டாலியன் காவலர் எஸ்.சோழபூபதிராஜா, சென்னை உயர் நீதிமன்றக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ‘திருச்சியில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறேன். தமிழகத்தில் 969 சார்பு ஆய்வாளர்கள் நேரடி நியமனம் செய்வது தொடர்பாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மாணவர்கள் குழப்பம்!
மேற்குறிப்பிட்ட 969 பணியிடங்களில் 20% பணியிடங்கள் காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதன் படி காவல்துறையில் 5 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் சார்பு ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தகுதியின் அடிப்படையில் நான் சார்பு ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். அதில் எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதில் நூற்றுக்கு 74 மதிப்பெண் பெற்றேன்.
தொடர்ந்து NSS சான்றிதழுக்கு 0.50 மதிப்பெண் வழங்குவதாக தெரிவித்தனர். மேலும் MBC மற்றும் TNC போன்ற பொதுப்பிரிவுக்கான கட் ஆப் மதிப்பெண் 74.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் எனது NSS சான்றிதழுக்கு 0.50 மதிப்பெண் கிடைக்கும் என்ற நிலையில் நான் சார்பு ஆய்வாளராக தேர்வு செய்யப்படுவேன் என எதிர்பார்த்திருந்தேன். இந்த நிலையில் சார்பு ஆய்வாளர் பணிக்குத் தேர்வானோர் பட்டியல் கடந்த ஏப்ரல் 15 அன்று வெளியிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அந்த பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை. எனவே பணி நியமனத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலை ரத்து செய்து எனக்கு பணி ஆணை வழங்க வேண்டும். அதுவரை பணி நியமனத்துக்கான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு சார்பு ஆய்வாளர் பணியிடத்தை எனக்கு வைக்கவும் உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.