தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக குளிர் நிலவும் – இன்றைய வானிலை தகவல்!
தமிழகத்தில் தற்போது அதிக அளவு குளிர் நிலவுகிறது. இந்த நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
இந்தியா முழுவதும் தற்போது கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக டெல்லி . உத்தரபிரதேசம், பீகார், உள்ளிட்ட பல வடமாநிலங்களில் குளிர் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு வட மாநிலங்களில் குளிர் அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
வட மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் எப்போதும் இல்லாத அளவு குளிர் நிலவுகிறது. அதிகாலை நேரங்களில் மூடு பனி சூழ்கிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் ஜன. 17ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.