தமிழகத்தில் டாஸ்மாக் பதவி உயர்வுக்கு எந்த விதிகளும் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!
டாஸ்மாக் தொடங்கி 19 ஆண்டு கடந்தும் நியமனம், பதவி உயர்வுக்கு விதிகளை வகுக்காதது குறித்து உயர்நீதிமன்றம் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாத நியமனத்தால் லட்சக்கணக்கான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது என கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் பணி நியமனம்:
தமிழகத்தில், டாஸ்மாக் நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் விற்பனையாளராக பணியாற்றிய மிகிரன் என்பவர், கடந்த 2006ஆம் ஆண்டில் சூப்பர்வைசர் பணியில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டில் மீண்டும் விற்பனையாளர் பணிக்கு மாற்றப்பட்டார் மிகிரன். இது தொடர்பான உத்தரவை எதிர்த்து மிகிரன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். மேலும் விசாரணையின் போது, தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட மனுதாரரின் பணி வரன்முறைப்படுத்தப்படாததால் சூப்பர்வைசராக அவரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், சூப்பர்வைசர்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளும் இல்லை எனவும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் நிறுவனம் தொடங்கி 9 ஆண்டுகள் கடந்த பிறகும், பணி நியமனம், பதவி உயர்வுக்கான விதிகள் வகுக்கப்படாதது குறித்து நீதிபதி அதிர்ச்சி தெரிவித்தார்.மேலும், அரசியல் சட்ட விதிகளின்படி, இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல் நியமனங்கள் மேற்கொண்டதால் லட்சக்கணக்கான தகுதியான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை வீரர் – சொந்த ஊரில் நல்லடக்கம்!
Exams Daily Mobile App Download
மேலும் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்வதாக இருந்தாலும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, அவ்வாறு இல்லாமல் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை டாஸ்மாக்கில் நியமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனவும், இது முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் எச்சரித்துள்ளார். இந்த விவகாரத்தை கவனிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதி, மனுதாரரை சூப்பர்வைசர் பணியில் இருந்து விற்பனையாளராக மாற்றிய விஷயத்தில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தற்போது தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.