தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொள்ளாத 50000 மாணவர்கள் – அமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை இரண்டு தேர்வுகள் முடிவடைந்து இருக்கிறது. இந்நிலையில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளாதது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பொதுத்தேர்வு அறிவிப்பு
தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை தமிழ் முதல்தாள் மற்றும் ஆங்கிலம் முதல்தாள் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் முதல் தேர்வில் சுமார் 50000 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
அதனை தொடர்ந்து இரண்டாம் தேர்விலும் அதே மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் எனவும், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுத இருப்பதால் தேர்வுக்கு வரவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50000 மாணவர்கள் எழுதாது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.