சேலம் மாவட்டத்தில் 2 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அச்சம்!
தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கும் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளிடையே அச்சம் நிலவி வருகிறது. மேலும் அந்த குறிப்பிட்ட பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
2 மாணவிகளுக்கு கொரோனா:
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
144 தடை உத்தரவு அமல், பள்ளிகளுக்கு விடுமுறை – பிரதமர் மோடி வருகை எதிரொலி!
அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டாலும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அனைத்தும் முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மினி ஊரடங்கு, பொது இடங்களுக்கு செல்ல தடை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு!
அதாவது நேற்று முன்தினம் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் 1 மாணவி மற்றும் அயோத்தியாபட்டினம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் 1 மாணவி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த குறிப்பிட்ட பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.