வினாத்தாள் கசிவிற்கு ரூ.1 கோடி அபராதம் & 10 ஆண்டுகள் சிறை தண்டனையா? குஜராத்தில் புதிய மசோதா பரிந்துரை!
குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் பணியிடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் இத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததால் இத்தேர்வு நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வினாத்தாள் கசிவிற்கு புதிய தண்டனை குறித்த மசோதா சட்டமன்ற கூட்டத்தொடரில் பரிந்துரைக்கப்பட உள்ளது.
வினாத்தாள் கசிவு
குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் பணியிடத்திற்கான தேர்வு கடந்த மாதம் 29ம் தேதி அன்று நடைபெற இருந்தது. ஆனால் காவல்துறைக்கு கிடைத்த தகவலின் படி, சந்தேகத்துக்கிடமான நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரிடமிருந்து இத்தேர்வுக்கான வினாத்தாளின் நகல் கைப்பற்றப்பட்டது. இத்தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தால் ரத்து செய்யப்பட்டது. இதனால் 9.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் இத்தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் கசிவிற்கு காரணமான குற்றவாளிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இதில் ‘குஜராத் பொதுத்தேர்வு 2023’ என்ற புதிய மசோதா ஒன்று பரிந்துரைக்கப்பட உள்ளது. இந்த மசோதாவில் அரசு போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் கசிவிற்கு காரணமாக இருக்கும் குற்றவாளிகளுக்கு ரூ.1 கோடி அபராதம் அல்லது அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து கூட்டத்தொடரில் விவாதம் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் மசோதா நிறைவேற்றப்படும்.