தமிழகத்தில் நாளை முதல் தொடர் விடுமுறை தொடங்க உள்ளதால் பேருந்து கட்டணம் பயணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு என்று அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பேருந்து கட்டணம்:
தொடர் விடுமுறை நாட்கள் வந்தாலே தனியார் பேருந்துகளின் டிக்கெட் கட்டண உயர்வு புகார்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு இடம்பெறுகிறது. அந்த வகையில் மார்ச் 29ஆம் தேதியான நாளை புனித வெள்ளி, மார்ச் 30 சனி மற்றும் 31 ஞாயிறு என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறைகள் கிடைத்துள்ளது. இந்த மூன்று தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க ஏதுவாக தமிழக அரசு கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தந்தது. இதற்கான முன்பதிவுகள் நடைபெற்று முடிந்து விட்டது. இதனால் இறுதி நேரத்தில் பயணிக்கும் மக்களுக்கு அரசு பேருந்துகளில் போதிய இடம் கிடைக்காது. எனவே வேறு வழியின்றி தனியார் பேருந்துகளை நாடி செல்ல வேண்டி உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் வழக்கம் போல் டிக்கெட் கட்டணத்தை இரண்டு, மூன்று மடங்கு என்று உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் தற்போது இந்த மூன்று நாள் விடுமுறை முன்னிட்டு சென்னையிலிருந்து மதுரைக்கு ரூபாய் 5000, சென்னை டு கோவை ரூபாய் 5000, சென்னை டு பெங்களூர் ரூபாய் 3000, சென்னை டு விஜயவாடா ரூபாய் 2200 என்று டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அளவு கட்டணத்தை சாமானிய மக்கள் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
SBI வங்கி வெளியிட்ட புதிய கட்டண பட்டியல் – உடனே தெரிஞ்சுக்கோங்க மக்களே!
முன்பதிவு பேருந்துகளை தவிர கூடுதலாக 650 பேருந்துகள் சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அரசு முன்பதிவில்லாத பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.