தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி பேசியது.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்:
நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என 19 வருடங்களாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு முதலான எந்தவிதப் பலன்களும் இல்லாததால் தான், ஊழியர்கள் இந்த திட்டத்தை ரத்து செய்ய போராடி வருகின்றனர். ஆனாலும் அரசு ஊழியர்களின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய அரசு கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் உள்ளது. மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வராத இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும் என அறிக்கை வெளியானது.
இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலம் இத்திட்டத்தை அறிவித்தது. இந்த இரண்டு மாநிலங்கள் மட்டும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு தற்போது மாறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அரசு எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. தற்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜான் கென்னடி தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ரக்ஷித் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் முத்துசாமி தீர்மானங்களை விளக்கி பேசினார். அந்த கூட்டத்தில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் என்று அறிவித்தது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு? கல்வித்துறை ஆணையர் விளக்கம்!
எனவே ஆட்சிக்கு வந்த பிறகும் ஏன் இந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினர். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை விரைவில் நடத்த வேண்டும். தற்போது பதவி உயர்வில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து, அதனை எமீஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து, அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.