தமிழக கல்வி அதிகாரிகளுக்கான அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!
தமிழக பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் நலன் கருதி பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கல்வி அதிகாரிகள் சம்பளத்திற்காக வேலை செய்யாமல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர் அறிவுறுத்தல்:
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியது, தற்போதைய சூழலில் பள்ளி கல்வி துறைக்கு மக்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பாராட்டுகளும், விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள சிஇஓ, டிஇஓ ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கும் நேரடியாக சென்று ஆய்வுகள் அடிக்கடி நடத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் சிஇஓ-க்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து கற்றல் திறன் குறித்து விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதேபோல், பள்ளி கல்வித்துறை நல்ல பெயர் எடுத்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தால் பள்ளி கல்வித்துறைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதை 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்று கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் பிரச்னைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என கூறினார். மேலும் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க, அனைத்து தனியார் பள்ளிகளிலும், மீண்டும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அமைச்சர் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம் தான். அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் மட்டும் தான் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக பேசப்பட்டு வரும் நிலையை மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. எனவே மாவட்டக் கல்வி அதிகாரிகள் சம்பளத்திற்காக வேலை செய்யாமல், தாங்கள் இருக்கும் துறையில் கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் முகாம்கள் – அரசு நடவடிக்கை!
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே. கணேசன் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.