இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசின் புதிய உத்தரவு!
டெல்லியில் கடந்த மாதம் முதல் அமலில் இருந்து வரும் கொரோனா 3ம் அலைத்தடுப்பு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 7 முதல் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து பயிற்சி நிறுவனங்களும் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது.
பள்ளிகள் திறப்பு
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த கொரோனா 3ம் அலை மற்றும் ஒமிக்ரான் வைரஸை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் டெல்லி முழுவதும் தற்போது கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சியை கண்டு வருகிறது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அளிக்க முடிவு செய்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம், பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (DDMA) ஆலோசனை நடத்தியது.
TN Job “FB Group” Join Now
இந்த கூட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்களை அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் டெல்லியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் பிப்ரவரி 7ம் தேதி முதல் திறக்கப்பட இருக்கிறது. குறிப்பாக, பள்ளிகள் முதற்கட்டமாக 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டுமே பிப்ரவரி 7 முதல் திறக்கப்பட இருக்கிறது. மேலும் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் டெல்லியில் இரவு ஊரடங்கு உத்தரவு ஒரு மணிநேரம் தளர்த்தப்பட்டுள்ளது. அதன் படி, இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். தொடர்ந்து அலுவலகங்கள் 100 சதவீத வருகையுடன் பணியை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்த அரசாங்கம், கார் ஓட்டுபவர்கள் மட்டும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் பிப்ரவரி 14 முதல் மீண்டும் தொடங்கும் என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.