தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் நாளை முக்கிய நிகழ்வை ஒட்டி மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தின் கோவில் மாநகரமான மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் விமர்சையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மனுக்கும் சிவனுக்கும் திருக்கல்யாணம் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று மிகவும் சிறப்பாக தேரோட்டம் நடந்து வருகிறது. அதேநேரம் அழகர் கோவிலிலிருந்து கள்ளழகர் மதுரையை நோக்கி புறப்பட்டு உள்ளார். நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையை நோக்கி படையெடுப்பார்கள். மேலும் உள்ளூர் மக்கள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். எனவே மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மே 11ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.