இன்று முதல் இரவு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா குறைந்து வருவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 14) முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பகல் நேரங்களில் கடைகளை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஏப்ரல் 27 முதல் கர்நாடகாவில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது ஜூன் 21 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல் – 6 முக்கிய அறிவிப்புகள்!
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகளின் விகிதம் குறைந்து வரும் சூழலில், பல்வேறு அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வு அளிக்க அரசு முடிவு செய்தது. அந்த வகையில் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் புதிய வழிகாட்டுதல்களின் படி,
- கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 19 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் திறந்திருக்கும்.
- தவிர மீதமுள்ள 11 மாவட்டங்களில், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்கப்படும்.
- கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பணியாளர்களுடன் தொழிற்சாலைகள் செயல்பட முடியும்.
- ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் 30% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
- ஆட்டோக்கள் மற்றும் டாக்ஸிகளில் அதிகபட்சம் இரண்டு பயணிகள் பயணிக்கலாம்.
- தினசரி இரவு நேர ஊரடங்கு உத்தரவு இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
- வார இறுதி ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள் கிழமை அதிகாலை 5 மணி வரை தொடரும்.
- கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே உள்ள கட்டுமானப் பொருட்களை விற்கும் கடைகள் அனுமதிக்கப்படும்.
- நடைபயிற்சி செய்பவர்களுக்கு காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை பூங்காக்கள் திறக்கப்படும்.
- ஹோட்டல்களும், உணவகங்களும் பார்சல் சேவைகளுக்காக மட்டுமே திறக்கப்படும்.