கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி – மாநில அரசின் சூப்பர் திட்டம்!
கடந்த ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி:
நாடு முழுவதும் பெண்களை முன்னேற்றும் நோக்கில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. பெண்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நலத்திட்ட உதவிகளையும் அரசு தொடர்ந்து அறிவித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் உத்திரப் பிரதேசம் மாநில அரசு பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தி இருக்கிறது.
அதன்படி உத்தரப் பிரதேச மாநில அரசின் ராணி லட்சுமிபாய் திட்டம் மூலமாக திறமையான பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படுகிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இதற்கான உறுதிமொழி தேர்தலின் போது வழங்கப்பட்டது, இந்த திட்டம் மூலம் பட்டப்படிப்பு அல்லது முதுகலை படிப்பு படிக்கும் சிறந்த மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது பெண் குழந்தைகளின் தன்னிறைவுக்கான நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்கள் தவிர தனியார் பல்கலைக்கழக மாணவிகளும் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் பயன்களை பெற யோகி ஆதித்யநாத் அரசிடமிருந்து ஒப்புதல் வாங்குவது கட்டாயம் ஆகும். அதன் பின் இந்த திட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதன் பின் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கி ஸ்கூட்டி வழங்கப்படும்.
இந்த நிதியுதவி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும், தகுதியுள்ள பெண் மாணவர்கள் கல்விச் சான்றிதழ்கள், வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவியின் குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் மாணவிகள் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் அல்லது முதுநிலைப் பெண் மாணவர்களுக்கு அவர்களின் பட்டப்படிப்பின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும்.
விதிமுறைகள்:
- இந்த திட்டத்தின் பயன்பெற மாணவிகள் கட்டாயம் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் படிக்க வேண்டும்.
- மேலும் மாணவிகளின் வங்கி கணக்கை ஆதாருடன் இணைக்க வேண்டும்.
- இந்த திட்டத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- கல்லூரி மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.