தமிழகத்தில் பத்திர பதிவு சேவைகளுக்கான கட்டணம் இரட்டிப்பு – இன்று முதல் அமல்!
தமிழகத்தில் பத்திர பதிவு சேவைகளுக்கான கட்டணம் 20 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில் தற்போது இரண்டு மடங்காக சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
சேவை கட்டணம்:
தமிழகத்தில் பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாகவே கட்டண உயர்வு செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், பத்திரப் பதிவு ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் அனைத்தும் இரட்டிப்பாக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் தற்போது வரை ரூபாய் 20 வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூபாய் 200 ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட் ரசீது மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் ரூபாய் 4000 லிருந்து ரூ. 10,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளாக அதிகபட்ச பத்திர தீர்வைகளுக்கு ரூபாய் 25,000 கட்டணமாக வசூல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூபாய் 40 ஆயிரம் வசூல் செய்யப்படும் எனவும், தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூபாய் 200 ல் இருந்து ரூ.1000ஆகவும், பொது அதிகார ஆவணங்களுக்கான கட்டணம் ரூ. 10,000 ஆகவும் வசூலிக்கப்பட இருப்பதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலா சாமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த பத்திரப்பதிவு தொடர்புடைய அனைத்து சேவை கட்டண உயர்வும் இன்று முதல் தமிழகத்தில் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.