நுழைவுத் தேர்வில் பட்ட படிப்புடன் 4 ஆண்டுகளில் B.Ed., – மத்திய கல்வித்துறை அறிமுகம்!
அடுத்த கல்வி ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு, பி.எட்., படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சகம்:
தற்போது மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பு மூன்று ஆண்டுகள் படித்து முடித்த பின்னர் 2 ஆண்டு பி.எட் படித்து வருகின்றனர். எனவே இதனை இணைத்து 4 ஆண்டுகளில் இளநிலைப் பட்டப்படிப்பு, பி.எட். படிப்புடன் கூடிய ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தை மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தவுள்ளது. இது அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் 4 ஆண்டுகளில் பிஏ-பி.எட், பிஎஸ்சி-பி.எட், பி.காம்-பி.எட் ஆகிய இரு பட்டப்படிப்புகளை முடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.
2030-ம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் மூலமே ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது. எனவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கூறுகின்றனர். இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி கூறியதாவது, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் இந்தப் புதிய படிப்புக்கான பாடங்களை வகுத்துள்ளது. இதன்படி வரலாறு, கணிதம், அறிவியல், கலை, பொருளாதாரம், வணிகவியல் ஆகியவற்றில் ஒரு மாணவர் பட்டம் பெறவும், ஆசிரியர் கல்வியில் பட்டம் பெறவும் முடியும்.
ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் என்பது நவீன கற்பித்தலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தொடக்க நிலை, அடிப்படைக் கல்வி அறிவு மற்றும் எண்ணியல், முழுமையான கல்வி முறை மற்றும் இந்தியா மற்றும் அதன் உயர்ந்த பாரம்பரிய மதிப்புகள், நெறிமுறைகள், கலை, மரபுகள் உள்ளிட்டவற்றை புரிந்து கொள்ள அடித்தளத்தை வகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டம் 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். தேசிய தேர்வு முகமை மூலம் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச பட்டப்படிப்பு தகுதியாக மாறும் எனவும் கூறியுள்ளார். நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்துறை கல்வி நிறுவனங்களில் இந்த திட்டம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தில் படித்து வெளியேறும் ஆசிரியர்கள் பன்முக சூழலில், தேசத்தின் மதிப்புகள், பாரம்பரியங்களை அறிந்து 21ம் நூற்றாண்டுக்கு தேவையானவற்றை உலக தரத்தில் வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.