தமிழகத்தில் 45 நாட்களுக்கு பின்னர் பேருந்து சேவைகள் – பொதுமக்கள் நிம்மதி!
தமிழகத்தில் சுமார் 45 நாட்களுக்கு பின் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நேற்று (ஜூன் 28) முதல் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியது. தற்போது ஒரு பேருந்தில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பேருந்து சேவை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பேருந்து சேவை உட்பட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு விதிக்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு பல தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜூன் 21ம் தேதி முதல் வகை 3ல் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களில் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியது.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!
இதனை அடுத்து வகை 2ல் இடம்பெற்றுள்ள 23 மாவட்டங்களில் சுமார் 45 நாட்களுக்கு பின் நேற்று (ஜூன் 28) முதல் பேருந்து சேவைகள் தொடங்கியது. அரசின் அறிவுரைப்படி ஒரு பேருந்தில் 50% பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி மதுரை மண்டலத்தில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 700 பேருந்துகளும், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்கள் அடங்கிய மதுரை கோட்டத்தில் 1400 பேருந்துகளும் நேற்று (ஜூன் 28) இயக்கப்பட்டன.
TN Job “FB Group” Join Now
அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் 75% பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன. விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, வில்லி புத்தூர், ராஜபாளையம் அரசு போக்குவரத்து பணிமனைகளில் 358 பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நகர பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே நேரத்தில் கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை காரணமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.