தமிழகத்தில் கிராம உதவியாளர் பணி நியமனம் குறித்த வழக்கு – நீதிமன்றம் புதிய உத்தரவு!
தமிழகத்தில் கிராம உதவியாளர் பணி நியமனத்தில் அரசின் விதிகளை பின்பற்றவில்லை எனவும், இதனால் கிராம உதவியாளர் பணி நியமனங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் அரசின் விதிகளை சரியாக கடைபிடிக்காமல் கிராம உதவியாளர் பணி நியமனம் செய்யப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த சிதம்பராபுரத்தை சேர்ந்த பிரிஸ்மலா என்பவரது கணவர் 2021 ஆம் ஆண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். மேலும் பிரிஸ்மலா எட்டயபுரத்தில் கிராம உதவியாளர் பணியில் சேர விண்ணப்பித்து இருந்தார். ஏற்கனவே கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான தமிழக அரசாணையின் படி அரசு பணிகளில் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்தநிலையில் எட்டயபுரம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு அவர் விதவைகளுக்கான முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பித்த நிலையில், இந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பில், முன்னுரிமை அரசாணைகளை பின்பற்றுவது குறித்த விவரங்கள் இடம் பெறவில்லை என்றும், மேலும் விதவைகளுக்கான முன்னுரிமை அடிப்படையில் எனக்கு கிராம உதவியாளர் பணி வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்,
இந்த வழக்கு விசாரணையில் அரசு வக்கீல் வைரம்சந்தோஷ் ஆஜராகி, கிராம உதவியாளர் பணிக்கான தேர்வில் மனுதாரரும் பங்கேற்றார். ஒட்டுமொத்த மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடந்துள்ளது. இதில் விதி மீறல்கள் எதுவும் இல்லை என தெரிவித்தார். அதன் பின் மனுதாரர் வக்கீல் தாளைமுத்தரசு ஆஜராகி கயத்தாறு தாலுகாவில் கிராம உதவியாளர் பணி நியமனத்தின்போது, விதவை பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் எட்டயபுரம் தாலுகாவில் இந்த நடைமுறைகள் பின்பற்றவில்லை. எனவே பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டுமெனவும், வழக்கின் இறுதி உத்தரவைப் பொறுத்துத்தான் பணி நியமன நடவடிக்கைகள் அமையும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.