தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பாடப்புத்தகங்கள் வருகை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2022 – 2023ம் கல்வியாண்டிற்கான முதல் பருவ பாடபுத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகிறது. தற்போது நாமக்கல் மாவட்டத்தில் 1,60,000 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இப்புத்தகங்களை பள்ளி திறந்தவுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்கள்:
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் பொதுத்தேர்வு முடிவடைய உள்ளது. நாளை முதல் அம்மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. மேலும் 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு 1 – 10 வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது. அதன்படி தற்போது 2022 – 2023ம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக விநியோகிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி திறக்கும் நாளில் வழங்க 1,60,000 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்திற்கு 1-ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 31,200 மாணவர்களுக்கும், 6-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 37,700 மாணவர்களுக்கும், 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 13,200 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 82,100 மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்திற்கு 80,000 மாணவர்களுக்கும் சேர்த்து மொத்தமாக சுமார் 1 லட்சத்து 60,000 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.