TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2,2ஏ தேர்வு இந்த மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2,2ஏ தேர்வு குறித்த முழு விபரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
குரூப் 2,2ஏ தேர்வு
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வகையான பதவிகளுக்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 2,2ஏ பணியிடத்தில் 5831 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களம் – பிப்.7 முதல் பிரச்சாரத்தை துவக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது நேர்முத் தேர்வு உள்ள பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள் என இருவகையான பதவிகளுக்கும் ஒரே ஒரு தேர்வு நடைபெறுகிறது. மேலும் இந்த தேர்வுக்கு பட்டபடிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். ஆனால் ஒரு சில பதவிகளுக்கு கூடுதலான சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அதாவது தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு தட்டச்சு படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு
குரூப் 2 பதவிகளில் பணிபுரிய பொதுபிரிவினருக்கு 20 வயது முதல் 30 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை இருக்கலாம். ஆனால் ஒரு சில பதவிகளுக்கு குறைந்தப்பட்ச வயது தகுதியில் மாற்றங்கள் இருக்கும்.
பதவிகள்
குரூப் 2 தேர்வில் நேர்முகத் தேர்வு கொண்ட தேர்வில் தேர்ச்சி பெற்றால் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பணி புரியலாம்.
இதையடுத்து குரூப் 2 தேர்வின் நேர்முகத் தேர்வு அல்லாத தேர்வில் தேர்ச்சி பெற்றால் அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களில் பணிபுரியலாம்.
தேர்வு முறை
குரூப் 2 தேர்வில் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
முதல்நிலைத் தேர்வு
பொது அறிவு பகுதியில் பட்டப்படிப்புத் தரத்தில் 175 வினாக்களும் கணிதப்பகுதியில் பத்தாம் வகுப்புத் தரத்தில் 25 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படுகிறது.
முதல்நிலைத் தேர்வு கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள்
பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்தியாவின் புவியியல், இந்தியாவின் வரலாறும் பண்பாடும், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.
முதன்மை தேர்வு
முதன்மைத் தேர்வில் பகுதி ‘அ’ மற்றும் பகுதி ‘ஆ’ என இரு பகுதிகள் உள்ளது.
பகுதி ’அ’
1. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
2. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
இந்த பகுதியில் மொத்தம் 4 வினாக்கள் கேட்கப்படுகிறது. ஒரு வினாவிற்கு 25 மதிப்பெண் வீதம் மொத்தம் 100 மதிப்பெண்களை கொண்டது. மேலும் இப்பகுதியில் குறைந்தபட்சமாக 25 மதிப்பெண்கள் கட்டாயமான முறையில் எடுக்க வேண்டும். அத்துடன் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் தான் பகுதி ‘ஆ’ விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.
பகுதி ‘ஆ’
1.சுருக்கி வரைதல்
2. பொருள் உணர்திறன்
3. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
4. திருக்குறளிலிருந்து கீழ்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
5. கடிதம் வரைதல்
தேர்வுக்கான பாடத்திட்டம்
தமிழ்நாட்டின் வரலாறும், மரபும், பண்பாடும், தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்மொழி வளர்ச்சியில் சங்க கால இலக்கியமும் வரலாற்றுச் சான்றுகளும், தமிழ்நாட்டின் இசை மரபு, நாடகக்கலை, சமூகப் பொருளாதார வரலாறு, பகுத்தறிவு இயக்கங்கள், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நலத் திட்டங்களை நடைமுறைபடுத்துவதில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு, பெண்ணியம், இக்காலத் தமிழ்மொழி உள்ளிட்ட தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.