ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 250 நாட்களுக்கு பிறகு இன்று (டிச.6) முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மீண்டுமாக துவங்கி இருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து மேள, தாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகள் திறப்பு
இந்தியாவில் கொரோனா 2ம் அலைத்தொற்று ஓய்ந்து வருவதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகளை மீண்டுமாக திறக்கும் நடவடிக்கை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இதுவரை 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 250 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 9ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 லிருந்து 12ம் வகுப்புகளுக்காக திறக்கப்பட்ட போது, 1 முதல் 8ம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்ட புதுச்சேரி நிர்வாகம், இன்று (டிச.6) முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை துவங்க அனுமதி அளித்துள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத கேஷ்பேக் சலுகை – முக்கிய விவரங்கள் இதோ!!
இப்போது, கிட்டத்தட்ட 250 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்க கல்வித்துறை சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது. அதன் கீழ், பள்ளிகளின் நுழை வாயிலில் வாழைமரத்தால் தோரணங்கள் கட்டப்பட்டு, மேள தாளங்கள் ஒலிக்க மாணவர்களுக்கு பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து, மாலை அணிவித்தும் உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதன் நோக்கில், மாணவர்கள் அனைவரும் வகுப்பறைகளில் சமூக இடைவெளி விட்டு அமரவைக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசங்களும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று முதல் முழு நேர வகுப்புகள் ஆரம்பமாகிறது குறிப்பிடத்தக்கது.