தமிழகத்தில் நவ.1 முதல் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அனுமதி!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத இருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பாதிப்பு குறைந்ததினால் முன்னதாக ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்பின்னர், 9, 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து தொற்று பாதிப்பு நிலை மோசமடைந்து காரணத்தால் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மூடப்பட்டது.
இந்நிலையில், 2021-2022 கல்வியாண்டு தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு முன்னதாக இணைய வழி வகுப்புகள் தான் நடத்தப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. இதனால் தீவிர ஆலோசனைக்கு பின்னர், முன்னதாக உயர்நிலை வகுப்புகளான 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆயினும், ஆரம்ப நிலை வகுப்புகளான 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் பல மாதங்களாக பள்ளியில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளாததால் கற்றல் குறைபாடு அடைந்திருப்பதாகவும், இதனால் பள்ளிகள் திறக்க வேண்டியும் அரசுக்கு பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
முன்னணி நிறுவனங்களின் ரூ.1,000 கீழ் உள்ள பிராட்பேண்ட் பிளான்கள் – முழு விவரம் இதோ!
இதனால் தமிழக அரசு 1 முதல் 8ம் வகுப்பிற்கு பள்ளியை திறக்க கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூகநல ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசித்து வந்தது. இந்நிலையில், அரசு தற்போது அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு குறித்த அறிவிப்பில், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.