தமிழகத்தின் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கலெக்டர்கள் உத்தரவு!
தமிழகத்தில் சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது, இருப்பினும் நேற்று முதல் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது அந்த வகையில் இன்று கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், பள்ளி கல்லூரிகள் பிப் 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மன்னர் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் ஆகும். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும் திருப்புதல் தேர்வு நடைபெறும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் பள்ளி மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்று அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் நாகை மாவட்டத்தில் இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டடத்திலும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார்.