பல்கலைக்கழக மானிய குழு உயர்கல்வி நிறுவனங்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை தற்போது விடுத்துள்ளது. அதன் படி, விதிகளை மீறும் நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
யுஜிசி கடும் எச்சரிக்கை:
பல்கலைக்கழக மானியங்கள் ஆணையமான யுஜிசி ஆனது, தற்போதைய சேர்க்கை செயல்முறையின் போது ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு இடம்பெயர விரும்பும் மாணவர்களின் “முழுக் கட்டணத்தையும்” திரும்பப் பெற தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு சான்றிதழ் மற்றும் கட்டணத்தை திரும்பப் தருவதற்கு தவறினால், அவர்கள் ஆணையத்திடம் இருந்து நிதியைப் பெறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும் என யுஜிசி கடுமையாக எச்சரித்துள்ளது.
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், இந்த ஆண்டு சேர்க்கை செயல்முறை நிறுத்தப்பட்டது, இதனால் ஆர்வமுள்ள பல மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
CUET, பங்கேற்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை சேர்க்கைக்காக முதல் முறையாக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டது. CUET-UG முடிவுகள் செப்டம்பர் 16ஆம் தேதியும், CUET-PG முடிவுகள் செப்டம்பர் 26ஆம் தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடம்பெயர விரும்பும் சில மாணவர்களுக்கு UGC உத்தரவை மீறி அவர்களின் தனியார் கல்வி நிறுவனங்கள் அபராதம் விதிக்கின்றனர். இந்த செயல் முறையை தடுக்கும் விதமாக யுஜிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் யூஜிசி விதிமுறைகளை மீறும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் திரும்ப பெறப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.