தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டது. மேலும் ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் – CITU வலியுறுத்தல்!
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. அதனால் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதன் படி நவம்பர் 1 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் கூறுகையில், சேலம் மாநகராட்சி ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகள் குடிநீர் தொட்டிகள், கழிப்பறை மற்றும் பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். நாள்தோறும் பள்ளிகள் தொடங்குவதற்கு முன் மற்றும் பள்ளி முடிந்த பின் என இரு வேளைகளிலும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ குழுக்கள் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரங்களை அனைத்து பள்ளிகளிலும் வைத்திட வேண்டும்.
அக்.25ம் தேதி 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திட சிறப்பு முகாம் அமைக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு வர ஏதுவாக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் நோய் கட்டுப்பாடு பகுதிகளின் விவரங்களை உடனுக்குடன் பள்ளிகளுக்கு வழங்கி அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறைகள் விடுதி வளாகங்கள் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.