திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் நாளை மறுநாள் மினி பிரம்மோற்சவம் என்றழைக்கப்படும் ரத சப்தமி ஆரம்பமாகிறது. இதனால் திருப்பதி தேவஸ்தானம் தரிசன டிக்கெட்டுகளுக்கு தற்சமயம் தடை விதித்துள்ளது.
தரிசன டிக்கெட்டுகளுக்கு தடை:
திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலில் வருகின்ற 16ம் தேதி அதாவது நாளை மறுநாள் மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இவ்விழாவின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க பிப்ரவரி 15 ம் முதல் 17ம் தேதி வரை ஆஃப்லைன் சர்வ தரிசன டிக்கட்டுகள் வழங்கப்படமாட்டாது என திருப்பதி தேவஸ்தானம் சார்பாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தரிசன டிக்கட்டுகள் இல்லாமல் வரும் யாத்ரீகர்கள் மற்றும் தங்களது தரிசன இடங்களை தவறவிட்டவர்கள் வைகுண்டம் II வளாகம் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பக்தர்களுக்கு தங்குமிட வசதி எளிதில் கிடைக்கிறது, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கியவர்கள் இரண்டு மணி நேரத்தில் திருப்பதி தரிசனம் செய்ய முடிகிறது.
நெல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 – உணவுத்துறை அமைச்சர் உறுதி!
இவ்விழாவை ஒட்டி பிப்.14 முதல் 16 வரை மத்திய வரவேற்பு அலுவலகத்தில் (CRO) உள்ள அறை ஒதுக்கீட்டு கவுன்டர்கள் செயல்படும் மற்றும் MBC, TBC கவுன்ட்டர்கள் மூடப்பட்டு இருக்கும். இந்த ரத சப்தமி விழாவின் போது பெருமாள் ஏழு வாகனங்களின் ஊர்வலம் வருவார். அதை பார்க்க மாட வீதிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, சிற்றுண்டி, பானங்கள் மற்றும் பால் ஆகியவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விழாவுக்கென 4 லட்சத்துக்கும் அதிகமான லட்டுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை புதிய காவல் கண்காணிப்பாளர் (SP) மல்லிகா கார்க் மற்றும் TTD அதிகாரி நரசிம்ம கிஷோர் ஆகியோர் மேற்கொண்டு வருகிறார்கள்.